கொழும்பு: இலங்கைக்குக் கிழக்கே நிலவும் தாழ் மட்ட வளிமண்டலக் குழப்பம் (low-level atmospheric disturbance) இன்னும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த அழுத்தப் பகுதியாக (low pressure area) விருத்தியடைய வாய்ப்புள்ளது. இதன் செல்வாக்கு காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
