கட்டுநாயக்க: இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் (4th South Asian Senior Athletics Championship) இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (ஒக். 28) அதிகாலை நாடு திரும்பியது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
40 பதக்கக் குவிப்பு
இந்தியாவின் ராஞ்சியில் ஒக்டோபர் 24 முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், இலங்கை அணி 16 தங்கம், 14 வெள்ளி, மற்றும் 10 வெண்கலம் என மொத்தமாக 40 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம், போட்டித் தொடரில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
அதிகாலை 2:10 மணிக்கு வருகை
பதக்கங்களை வென்ற இலங்கை தடகள வீரர்கள், இன்று (ஒக். 28) அதிகாலை 2:10 மணியளவில், இந்தியாவின் சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அமைச்சர், முப்படையினர் வரவேற்பு
நாடு திரும்பிய சாதனை வீரர்களை வரவேற்பதற்காக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே (Sunil Kumara Gamage), முப்படையின் விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
