தாஜுதீன் கொலை வழக்கு மீண்டும் விசாரணை: சம்பத் மான்பெரியின் வாக்குமூலத்தால் புதிய திருப்பம்!
கொழும்பு: போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதியான சம்பத் மான்பெரி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், றக்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் குறித்த புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (03) தெரிவித்தார்.
90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சம்பத் மான்பெரியிடம் நடத்தப்படும் விசாரணைகளின்போது கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த மறுவிசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பழிவாங்கும் ‘சூனிய வேட்டை’ இது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்துக் கேட்டபோது, “ஒருவர் கைது செய்யப்படுவோம் என அஞ்சினால், அதை ‘சூனிய வேட்டை’ எனக் கூறலாம். கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே அது எப்படித் தம்மோடு தொடர்புடையது என்பது தெரியும்,” என அமைச்சர் பதிலளித்தார். இந்த குற்றவியல் விசாரணைகள், நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன.
