கொழும்பு, நவம்பர் 26: இலங்கையில் தற்போது 365,951 பேர் வேலையற்றோராக உள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (நவம்பர் 26) பாராளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
2024 ஆம் ஆண்டின் தொழிலாளர் சக்தி ஆய்வின்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கான வேலையின்மை விகிதம் 2024 இல் 4.5% ஆக இருந்து 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7% ஆக இருந்த வேலையின்மை விகிதமும் 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது.
கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வேலையற்றோரின் எண்ணிக்கையையும் அவர் மேலும் விவரித்தார்:
- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்திற்குக் (O/L) கீழே: 103,308 பேர்
- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) சித்தியடைந்தவர்கள்: 91,405 பேர்
- கல்விப் பொதுத் தராதர உயர்தரம் (A/L) சித்தியடைந்தவர்கள்: 128,984 பேர்
- பட்டம் மற்றும் உயர்கல்வித் தகுதிகள் உள்ளவர்கள்: 42,254 பேர்
12,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கொள்கை அறிக்கைக்கு அமைவாக எஞ்சிய பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில், நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தவுடன் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
