கொழும்பு: “இலங்கையைக் கட்டியெழுப்புதல்” என்ற தொனிப்பொருளிலான 78வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
பிரதான நிகழ்வு இன்று காலை 7:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகும்.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரைச் சேர்ந்த 4,500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 அழைப்பாளர்களும் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுமூகமான போக்குவரத்துப் பாய்ச்சலை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நகரெங்கும் 2,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
