இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த ஈதுல் ஃபித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒரு மாத கால நோன்பைத் தொடர்ந்து புதிய பிறையைக் கண்டதும் கொண்டாடப்படும் இப்பண்டிகை, இஸ்லாமிய மத நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும் என அவர் விவரித்துள்ளார்.
தனது செய்தியில், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான றமழான் நோன்பு, உலக ஆசைகளிலிருந்து விலகியிருப்பதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், தியாகம் மற்றும் சுயக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் அமைந்த நற்பண்பு மிக்க வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதை இது காட்டுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
றமழான் அனுசரிப்பு உலக சமூகத்திற்கு ஆழமான மனிதாபிமான மற்றும் சமூகச் செய்திகளை வழங்குகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“றமழான் அதன் மையக்கருத்தில், இறையச்சம் உடையவர்களின் இதயங்களில் இரக்கத்தை ஏற்படுத்துகிறது. பிறரைப் புரிந்துகொள்ளத் தயாராக இருக்கும், பசியின் வலியைத் தன்பசியாகப் புரிந்துகொள்ளும், மேலும் சகோதர மனிதர்களை இரக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் அரவணைக்கும் தனிநபர்களை இது உருவாக்குகிறது.”
“இந்தக் காலப்பகுதியில், அமைதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு போன்ற உன்னத விழுமியங்கள் நம்பிக்கையாளர்களின் நடத்தையை மேலும் மேம்படுத்துகின்றன. ஒரு மாதம் முழுவதும், அவர்கள் நோன்பின் ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள், இது ஆன்மீக போஷாக்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நேரமாகும்” என்று ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
றமழானை “வாழ்ந்து காட்டிய முன்மாதிரி மூலம் மனிதாபிமானம் மற்றும் சகோதரத்துவத்தில் உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த பாடம்” என்று அவர் விவரித்தார்.
உலகம் முழுவதும் கடினமான மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில் இந்த ஆண்டின் ஈதுல் ஃபித்ர் அனுசரிக்கப்படுகிறது என்பதையும் ஜனாதிபதி திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
“இந்த றமழான் அனுசரிப்புகள் மற்றும் பிரார்த்தனைகளின் ஆசீர்வாதங்கள் மூலம், இந்தச் சவால்கள் விரைவில் தணியும், அனைவரும் விரும்பும் உலகம் உருவாகும், அனைவரின் உரிமைகளும் சுதந்திரங்களும் பாதுகாக்கப்படும், மேலும் அமைதி, செழிப்பு மற்றும் இணக்கமான சகவாழ்வு நிலவும் என்று நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்” என்று ஜனாதிபதி கூறினார்.
கடந்த காலத்தில் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட அரசாங்கம், தற்போதைய சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கும், அவற்றைத் திறம்பட நிர்வகிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் அல்லது இடையூறுகள் இல்லாமல் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
“வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தத் தேசிய முயற்சியுடன் அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அமைதியான மற்றும் இணக்கமான ஈதுல் ஃபித்ர் பண்டிகைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.”
