ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge Union) பல்கலைக்கழக ஒன்றியங்களில் நடைபெறவிருந்த தனது திட்டமிடப்பட்ட உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சுதந்திரமான விசாரணை, கடுமையான விவாதம் மற்றும் அறிவுசார் தைரியத்தின் மிக உயர்ந்த இலட்சியங்களை தலைமுறைகளாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஒன்றியங்களில் உரையாற்றுவதற்கு தான் ஆவலுடன் காத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவார்ந்த பார்வையாளர்களுக்கு முன்பாக சவாலான கேள்விகளை எதிர்கொள்ளவும், தனது கருத்துக்களைப் பாதுகாக்கவும், எதிர்க் கருத்துக்களுடன் ஈடுபடவும் பேச்சாளர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட அழுத்தத்தினால் (organized pressure) ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இந்த ஈடுபாடுகள் நடைபெற முடியாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று நாமல் ராஜபக்ச எழுதியுள்ளார்.
“பல்கலைக்கழகங்கள் மற்றும் விவாத மன்றங்கள் நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகளை இடையூறுகள் மூலமாகவன்றி, கலந்துரையாடல்கள் மூலமாகவும், கருத்துக்களை அச்சுறுத்தல்களால் அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக வாதங்கள் மூலம் சவாலுக்குட்படுத்தும் இடங்களாகவும் இருந்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
தனது கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்கள் உட்பட விமர்சகர்களுடன் நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்பை தான் வரவேற்றிருப்பேன் என்று மேலும் வலியுறுத்திய அவர், “திறந்த உரையாடலில் மாறுபட்ட கண்ணோட்டங்கள் சந்திக்கும் போது மட்டுமே அர்த்தமுள்ள நல்லிணக்கமும் முன்னேற்றமும் உருவாக முடியும். இத்தகைய ஈடுபாட்டை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது; அது விவாதத்தைப் பிளவாக மாற்றுவதன் மூலம் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகிறது,” என்று சாடினார்.
இரு ஒன்றியங்களினதும் அழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த நாமல் ராஜபக்ச, எதிர்காலத்தில் உரையாடல் மேலோங்கி, கலந்துரையாடல் ஊக்குவிக்கப்படும் ஒரு மன்றத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச இன்று (23) ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்ததுடன், கேம்பிரிட்ஜ் ஒன்றியத்திற்கான அவரது விஜயம் சில நாட்களுக்கு முன்னரே பல இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
