இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) உறுப்பினர்கள் இன்று (16) திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளனர். இதற்கமைய, எந்தவொரு வழக்குக்காகவும் அவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஆஜராக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலங்கம, அகுரேகொட பகுதியில் அண்மையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (15) கொழும்பு, புதுக்கடையில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. 14 வருடங்களின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி இவ்வாறானதொரு கூட்டத்தை நடத்தியமை இதுவே முதல் தடவையாகும்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, இந்தக் கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
ஏகமனதாக எடுக்கப்பட்ட நான்கு தீர்மானங்கள்:
- நாட்டில் நிலவும் கொலைக் கலாசாரத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- இன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தல்.
- இந்தக் கொடூரக் குற்றத்திற்குப் பொறுப்பான அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்க நிறுவனங்களைக் கோருதல்.
- உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உண்மையானவை போல சித்தரிப்பது அல்லது பரப்புவது குறித்து பொலிஸார் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துதல்.
தமது சக உறுப்பினர் ஒருவருக்கு நேர்ந்த இந்தத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், சட்ட சமூகத்தின் கூட்டு நிலைப்பாட்டை இந்த முடிவு பிரதிபலிக்கிறது என்று BASL தலைவர் மேலும் தெரிவித்தார்.
