ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ‘ஒருங்கிணைந்த நாடு’ (A Nation United) தேசிய வேலைத்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று (11) நுவரெலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன், நுவரெலியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் ‘ஒருங்கிணைந்த நாடு’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலானது மலையக சமூகத்தினர் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் சமூகத்தை இந்த அச்சுறுத்தலிலிருந்து விடுவிப்பதும், அதேவேளை அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நுவரெலியா நிகழ்வில், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் தீவிர பங்களிப்பை வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
