கொழும்பு, நவம்பர் 28: “டிட்வா” புயல் திருகோணமலைக்கு தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் 8.1°N அட்சரேகை மற்றும் 81.2°E தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, தீவு முழுவதும் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும் என்றும், பெரும்பாலான பகுதிகளில் இடைக்கிடை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 200 மி.மீ. இற்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருகோணமலை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 80-90 கிலோமீட்டர் வேகத்திலும் மிகக் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
