கொழும்பு, நவம்பர் 30: மாவிலாறு அணை உடைப்பதைத் தொடர்ந்து சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த பகுதியில் இருந்து விமான நடவடிக்கைகள் மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான அவசர கலந்துரையாடலின் போது, தங்கவெளி கிராமத்தில் உள்ள சுமார் 1,000 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியைத் தொலைபேசியில் அழைத்த ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், நேற்று (நவம்பர் 29) இரவு மூதூர் மற்றும் நீலபொல பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது கிண்ணியா நகரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரங்களில் இருப்பதாகவும், அவர்களை மீட்கக் கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவிலாறு குளக் கரை உடைப்பு சோமபுர, சிறிமங்கலபுர, கல்யாறு மற்றும் தெஹிவத்த பகுதிகளைப் பாதித்து வருகிறது. அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை சேருநுவரவில் உள்ள நவோதயா பாடசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் சேருவில ராஜமகா விஹாரையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட உள்ளனர்.
பேராதனை மண்சரிவில் 24 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
