மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்யும்போது நிலக்கரி நிலைமையால் ஏற்படும் மேலதிகச் செலவுகளைத் தவிர்ப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
இது குறித்து PUCSL விடுத்துள்ள அறிக்கையில், மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே கட்டணத் திருத்தங்களில் கருத்திற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கட்டணத் திருத்தத்திலும், நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிகச் செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
வருங்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும், நிலக்கரி நிலைமை அல்லது பிற நியாயமற்ற செலவுகளால் ஏற்படும் மேலதிகச் செலவுகளைத் தவிர்ப்பதற்கு ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
