Headlines

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுக்கு FCID அழைப்பு! சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, திருமதி மைத்ரி விக்ரமசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான இந்த விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே முன்னாள் முதல் பெண்மணிக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் செயலாளருக்குப் பிணை:

இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

சமன் ஏக்கநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ முன்வைத்த பிணைக் கோரிக்கையை ஆராய்ந்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணங்களில் விடுவிக்க உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி:

2023 ஆம் ஆண்டில், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக, 1 கோடியே 62 இலட்சம் ரூபாவுக்கும் (Rs. 16.2 million) அதிகமான பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார். இதே வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *