இரத்தினபுரி: இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி வருமானத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை நோக்கிய முக்கிய படியாக, இத்துறைக்கான முதலாவது அரச வர்த்தக இணையதளமான www.gemcityratnapura.com இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இந்நிகழ்வில் உரையாற்றுகையில், இந்த இலக்கை அடைய வைரக்கல் துறையை மேம்படுத்துவது மற்றும் பட்டை தீட்டப்படாத இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த கொள்கைகளை மாற்றி, நிலையான கொள்கைகளை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளத்தில், ‘GOV PAY’ என்ற புதிய கட்டண வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள், சப்ரகமுவ மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.