உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான இலங்கையின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வெய்ட் (Margaret Satterthwaite), இலங்கை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கை, தற்போது அறிக்கையிடப்பட்டுள்ள வடிவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடும் என ஐநா மன்டேட் தாரர் (mandate holder) எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சாட்டர்வெய்ட், முன்மொழியப்பட்ட திருத்தம் பதவியிலுள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தைப் பாதிக்கலாம் என்றும், இது நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபையின் தலையீடு குறித்த கவலைகளை எழுப்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதாயின், நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன், வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் கலந்தாலோசனை அடிப்படையிலான நீதிச் சீர்திருத்த செயல்முறையின் ஊடாக அதனை முன்னெடுக்குமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
