Headlines

வியட்நாம் – இலங்கை நேரடி விமான சேவை ஆரம்பம்: கட்டுநாயக்க வந்தடைந்தது முதல் விமானம்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதற்குப் பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விமான சேவையை வரவேற்பதற்காகக் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதம அதிதியாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *