ஓமானில் கைது செய்யப்பட்ட “சமித்புர சத்து” அல்லது “மோதர சத்து” என்று அழைக்கப்படும் கங்கனமகே திமுத்து சதுரங்க பெரேரா, இன்று அதிகாலை (18) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு (CCD) கொண்டு செல்லப்பட்டார்.
“மோதர சத்து” அல்லது “சமித்புர சத்து” என்றும் அழைக்கப்படும் திமுத்து சதுரங்க பெரேரா, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என்று கூறப்படும் நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் குழுவினால் ஓமானில் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு 15, மோதர, சமித்புரவைச் சேர்ந்த 38 வயதான இவர், கடந்த 2025 மார்ச் 22 ஆம் திகதி போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட இவர், இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் என தேடப்பட்டு வந்தார்.
அதன்படி, ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) அழைத்து வரப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு (CCD) அழைத்துச் செல்லப்பட்டார்.
