பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களுக்கு ட்ரோன் (Drone Taxi) மூலம் பயணிக்கும் புதிய திட்டத்தை இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.
இத்துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக தலைமையிலான சிறப்பு கூட்டத்தில், சீனாவின் ‘ஈஹாங்’ (EHang) நிறுவனத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்தச் சேவையின் மூலம் ஒரு பயணத்திற்கு 20 முதல் 30 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்துச் சேவையாக மட்டுமன்றி, அவசரகால பேரிடர் மீட்பு மற்றும் கடல்சார் வழிசெலுத்தலுக்கும் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த இரண்டு பயணிகள் பயணிக்கும் ட்ரோன்கள், AI மூலம் தானியங்கி முறையில் இயக்கப்படுபவை.
முதற்கட்டமாக கொழும்பு போர்ட் சிட்டியில் (Port City) ஒரு மாதிரி மண்டலத்தை நிறுவி இதனைச் சோதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் கிடைத்த பின்னரே இது நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார்.
