மலேசியாவில் கைது செய்யப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌஷல்ய என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பொலிஸ் விசாரணைகளில் பல குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
வாலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவினரால், மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் (Interpol) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.
41 வயதான இந்த சந்தேகநபர் ரத்மலானையைச் சேர்ந்தவர் என்றும், பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2014 ஆம் ஆண்டு நபரைக் கடத்தித் தாக்கியமை மற்றும் 2016 ஆம் ஆண்டு நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் இவர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், 2003 ஆம் ஆண்டு கல்கிசை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சைமாவுடன் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு இலங்கையர்களும் (35 வயதுடைய ரத்மலானைவாசி மற்றும் 31 வயதுடைய கல்கிசைவாசி) மேலதிக விசாரணைகளுக்காக இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
“ரத்மலானே சைமா” பாதாள உலகத் தலைவரான “கஞ்சிப்பாணி இம்ரானின்” நிதி விவகாரங்களைக் கையாண்டமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கஞ்சிப்பாணி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளை நிர்வகித்ததோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக ஊடகங்களில் பரப்புவதற்கும் இவர் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கஞ்சிப்பாணி இம்ரானின் அறிவுறுத்தலின் பேரில், “கெஹெல்பத்தர பத்மே” மலேசியாவில் தலைமறைவாக இருக்க சைமா உதவியதாகவும் விசாரணையாளர்கள் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
சைமா முன்பு பிரான்சில் வசிப்பதாக நம்பப்படும் “குடு அஞ்சுவின்” நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். பின்னர் கஞ்சிப்பாணி இம்ரானுடன் இணைந்தார். குடு அஞ்சு, சைமாவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அந்தத் திட்டம் குறித்து எச்சரிக்கப்பட்டதையடுத்து சைமா கஞ்சிப்பாணி இம்ரானுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சைமா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
