2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். இதற்காக தீவு முழுவதும் 2,532 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகே விடுத்துள்ள அறிவிப்பின்படி, 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 107,814 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சை நிலையங்கள், மேற்பார்வை ஊழியர்கள் மற்றும் பிற தளவாடத் தேவைகள் என உயர்தரப் பரீட்சையைச் சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் தங்களது அனுமதி அட்டைகளில் உரிய முறையில் கையொப்பமிட்டு சான்றுப்படுத்தியிருக்க வேண்டும். அனுமதி அட்டை தொலைந்திருந்தால், அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை (NIC), செல்லுபடியாகும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை மட்டுமே பயன்படுத்த முடியும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை தேசிய அடையாள அட்டை தொலைந்திருந்தால், பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபராலும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம நிலதாரியாலும் சான்றுப்படுத்தப்பட்ட இரண்டு புகைப்படங்களைப் தற்காலிக அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். பரீட்சை மண்டபத்திற்குள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், ப்ளூடூத் சாதனங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்டு செல்வது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டதை நினைவூட்டியுள்ள இந்திக்கா குமாரி லியனகே, பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு எச்சரித்துள்ளார். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் தேவையான வசதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
