அண்மையில் குருவிட்ட, பல்லன்சேன மற்றும் நியூ மகசின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களுக்குக் காரணமான குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இந்த மூன்று சிறைச்சாலைகளிலும் மோதல்கள் வெடித்தன. இச்சம்பவங்களில் மூன்று கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 54 பேர் காயமடைந்தனர்.
இதேவேளை, நேற்று (07) குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, கைதிகள் சிறை அறைகளின் கூரைகளை நாசப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப் பிரதேசத்தில் அடிக்கடி மழை பெய்து வருவதால், சேதமடைந்த அறைகளில் கைதிகளைத் தங்க வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, ரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் மேற்பார்வையில் இன்று (08) சிறைச்சாலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதியின்மையின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கான வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
