கொழும்பு: ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரவி செனவிரத்ன வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நான் ஒக்டோபர் 8ஆம் திகதி பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் முன்னிலையாகி, அங்கு எழுப்பப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்தது உண்மைதான். ஆனால், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக நான் எந்த இடத்திலும் கூறவில்லை,” எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எனவே, இந்தத் தவறான செய்தியைப் பரப்புபவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ரவி செனவிரத்ன தனது சட்டத்தரணிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
