நாடு தற்போது எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கிலான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தனது முதல் கூட்டத்தை நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடத்தியது.
இந்தக் கூட்டத்தில், போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக ஒழித்தல், அதற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுதல் மற்றும் ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செயல்படுத்துதல் ஆகியவை குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலால் இளைஞர் சமூகமும் பாடசாலை மாணவர்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும், இது எவ்வாறு ஒரு பாரிய சமூக-பொருளாதார பேரழிவாக உருவெடுத்துள்ளது என்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இங்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், ஜனாதிபதியின் இந்தத் திட்டத்திற்குத் தமது பாராட்டுகளையும் முழு ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.
