கொழும்பு – ‘வளமான நாடு – வளமான கல்விக்கான’ இலக்கை அடைவதில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன், ஜனாதிபதி அவர்கள் இன்று (17) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ‘நாட்டைக் கட்டியெழுப்பும் ஆசிரியர் தலைமுறை’ இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குப் பாரிய சக்தியாகச் செயற்பட்டதைப் போலவே, நாட்டிற்குத் தேவையான புதிய மாற்றத்திற்காகப் பல ஆண்டுகள் ஒன்றிணைந்து பணியாற்ற ஆசிரியர் தலைமுறையினருக்கு அழைப்பு விடுத்தார். கல்வியிலும் நாட்டின் ஒவ்வொரு துறையிலும் முற்போக்கான, எதிர்கால நோக்குடைய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் மாறுமாறு அவர் வலியுறுத்தினார்.
தாம் இழந்த எதிர்காலத்தை தமது குழந்தைகளுக்குப் பெற்றுக் கொடுக்கக் கனவு காணும் ஆயிரக்கணக்கான பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், அதற்காக அதிகத் திறமையுள்ள மனித வளத்தை உருவாக்கக்கூடிய வகையில் கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து நாட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
