கொழும்பு – தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கு இந்தியாவுடன் “ஒரு சிறப்பு உறவு” இருப்பதாகவும், அந்த உறவு “மேம்படுத்தப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் கட்டமைக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் ‘WION’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், பொருளாதார நெருக்கடியின் போது “சுமார் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு உதவி வழங்கி, நாட்டின் மக்களுக்குச் சிறிது நிவாரணம் அளித்த ஒரே பெரிய நன்கொடையாளராக இந்தியா விளங்குகிறது, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், 13வது திருத்தச் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, 13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்பதே எமது நிலைப்பாடு. மக்கள் அதன் செயலாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். அது நாட்டின் அரசியலமைப்பின் ஒரு பகுதி, அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
சீனக் கப்பல்களின் வருகை தொடர்பான பாதுகாப்பு பரிமாணங்கள் குறித்துப் பேசிய அவர், “இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ஒரு சிறப்பு உறவு உள்ளது. அதை மேம்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அமைதியைக் கட்டியெழுப்புவதன் மூலம் அனைவரின் பாதுகாப்பு நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, இந்தியாவுடன் ஒரு சிறப்பு நண்பராகவும், மற்றவர்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்” எனக் குறிப்பிட்டார்.
2028 ஆம் ஆண்டின் கடன் சவால்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கத்தின் அறிவிப்புகளுக்கும், நடக்கும் செயல்களுக்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை (mismatch) உள்ளது. 2022 இல் நடந்த சமூகப் பேரழிவு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, நாம் வேகமாகப் பொருளாதார வளர்ச்சி, அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதி வருவாயில் பெரும் முன்னேற்றங்களைக் காண வேண்டும், ஆனால் தேவையான இலக்குகளின்படி நாம் அதை அடையவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
