கொழும்பு: ஆடைத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளில் அரசாங்கம் முழுமையாக முதலீடு செய்யும் என, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஆடைத் துறை சார்ந்தவர்களுடன், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
அமெரிக்கா விதித்திருந்த வரிகளைக் குறைக்க அரசாங்கம் தலையீடு செய்தமைக்கு, தொழில்முனைவோர் இதன்போது ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்காக பிரத்தியேக அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குதல் மற்றும் வரி வசூலிப்பு பொறிமுறைகளை மேலும் நவீனமயமாக்குதல் போன்ற யோசனைகளை அவர்கள் முன்வைத்தனர்.
வரிச் சலுகைகள் வழங்குவது நாட்டின் வருமான நிலையைப் பொறுத்தே எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். தொழில்முனைவோரின் அனைத்து யோசனைகளையும் கவனமாகப் ஆராய்ந்து, ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்குமாறு அவர் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
