கொழும்பு, நவம்பர் 30: நாட்டில் நிலவும் அனர்த்த நிலையை முகாமைத்துவம் செய்வதற்கும், விரைவான மற்றும் திறமையான மீள் கட்டுமானச் செயற்பாட்டிற்கும் தேவையான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் ஏற்பாடுகளை வழங்குவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த அவசரகால நிலை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நாட்டைத் திறம்பட மீளக் கட்டியெழுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், எந்தவொரு ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
நாட்டிற்கான விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், ஜனாதிபதி தெரிவிக்கையில், நெருக்கடியை முகாமைத்துவம் செய்வது, இயல்பு நிலையை மீட்டெடுப்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்பிருந்ததை விடச் சிறந்த நிலைக்குக் கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
“இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது, அவற்றை எங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது, அனர்த்தம் மற்றும் அவசரகால முகாமைத்துவம், இயல்பு நிலையை மீட்டெடுத்தல், மற்றும் முன்பிருந்ததை விட நிலைமைகளை மேம்படுத்துதல் ஆகிய மும்மடங்கு செயன்முறைக்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது. நிலைமை எவ்வளவு சவாலாக இருந்தாலும், தேவையான நடவடிக்கைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் நம்புகிறோம்” என்று ஜனாதிபதி திஸாநாயக்க கூறினார்.
அதிகாரிகள் தற்போது நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய தேடுதல் மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும், நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
