Headlines

மருந்து விலை உயருமா? – PBS திட்டத்தைப் பாதுகாப்போம்: ஆஸ்திரேலிய அரசு உறுதி! – அமெரிக்கா-பிரிட்டன் ஒப்பந்தத்தால் அச்சம்!

கான்பெர்ரா, டிசம்பர் 08: அமெரிக்க மருந்துகளின் மீதான செலவினத்தை 25 சதவீதம் அதிகரிக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் மருந்து மானியத் திட்டம் (PBS) பேச்சுவார்த்தைக்குட்பட்டதல்ல என்று அல்பானீஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவிற்கான பிரிட்டனின் மருந்து ஏற்றுமதி மீதான வரிகள் (Tariffs) பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இதற்குப் பதிலாக, பிரிட்டன் தனது தேசிய சுகாதார சேவை (NHS) மூலம் அமெரிக்க மருந்துகளுக்காகச் செலவிடும் தொகையை 25 சதவீதம் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அச்சம்: பிரிட்டனின் இந்த முடிவால், ஆஸ்திரேலியாவிலும் மருந்துகளின் விலை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஆஸ்திரேலியாவும் இதேபோன்ற ஒப்பந்தத்தைச் செய்தால், அது வரி செலுத்துவோரின் தலையில் தான் விடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜனவரி 1, 2026 முதல் PBS திட்டத்தின் கீழ் உள்ள மருந்துகளின் விலையை அதிகபட்சம் $25 ஆகக் குறைக்க அல்பானீஸ் அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது.

அரசு உறுதிமொழி: வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “PBS திட்டத்தின் வடிவமைப்பில் அல்பானீஸ் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். PBS தொடர்ந்து ஆஸ்திரேலியர்களுக்கு நல்ல விலையில் நல்ல சுகாதார விளைவுகளை வழங்கும். ஆஸ்திரேலிய நலன்களைப் பாதுகாக்க அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து ஈடுபடுவோம்,” என்றார்.

அமெரிக்காவின் அழுத்தம்: அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில், மற்ற நாடுகளின் அரசாங்கங்களை மொத்த விலையை உயர்த்தும்படி கட்டாயப்படுத்த வரி விதிப்பு மிரட்டல்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆஸ்திரேலிய நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வலையமைப்பின் (AFTINET) ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாட்ரிசியா ரனால்ட் குற்றம் சாட்டினார். ஆஸ்திரேலிய அரசு இதுபோன்ற “மிரட்டல்களுக்கு” (Bullying Blackmail) அடிபணியக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *