ஆசியக் கிண்ணத்தில் இலங்கை அபார ஆரம்பம்: வங்கதேசத்தை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியது!
அபுதாபி: இலங்கை கிரிக்கெட் அணி, தனது ஆசியக் கிண்ணப் பயணத்தை ஒரு அபார வெற்றியுடன் இன்று (14) ஆரம்பித்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், வங்கதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்தியது.
140 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, பெத்தும் நிஸ்ஸங்க (50) மற்றும் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்ற கமில் மிஷார ஆகியோருக்கு இடையிலான 95 ஓட்டக் கூட்டணி, வெற்றியை உறுதி செய்தது. 32 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்தது.
முன்னதாக, இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால், வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. துஷ்மந்த சமீர மற்றும் நுவன் துஷார ஆகியோர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த, உபாதையிலிருந்து மீண்டு வந்த வனிந்து ஹசரங்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
