(கொழும்பு) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (29) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
கொடுப்பனவுகள் தொடர்பான பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து, சங்கம் ஏற்கனவே இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பின்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
- மருத்துவமனைகளில் இல்லாத மருந்துகளை, வெளியிலுள்ள தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்காகப் பரிந்துரைச் சீட்டுகளை (Prescriptions) வழங்குவதைத் தவிர்த்தல்.
- வெளியிலுள்ள தனியார் ஆய்வுகூடங்களில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பதைத் தவிர்த்தல்.
- வைத்தியர்களின் முறையான முன்னனுமதியின்றி மருத்துவமனை அமைப்பிற்குள் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதைத் தவிர்த்தல்.
- சுகாதார முகாம்கள் (Health camps) மற்றும் வெளியூர் கிளினிக்குகளில் பங்கேற்பதைத் தவிர்த்தல்.
- நோயாளரைப் பரிசோதிக்கும் போது உதவியாளர் (assisting officer) ஒருவர் இல்லாவிடின் சேவைகளிலிருந்து விலகுதல்.
அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் வரை இந்நடவடிக்கைகள் தொடரும் என சங்கம் எச்சரித்துள்ளது.
