கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று (03) வெவ்வேறு விசாரணை அமைப்புகள் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை, இன்று காலை 9.30 மணியளவில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்வதற்காக அவர் முன்னதாக கடந்த ஜனவரி 27, 2026 அன்று FCID முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்குத் தெரிவித்த அவர், இரண்டு வார கால அவகாசமும் கோரியிருந்தார்.
இருப்பினும், அவருக்கு இன்று (03) மீண்டும் FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ முன்னதாகவே CID யில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், வேறு ஒரு திகதியைக் கோரியிருந்தார். அதற்கமையவே இன்றைய தினம் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
