மாடல் (கரைவலை) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி மீனவர் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இன்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கையை முன்வைத்துவந்த மீனவர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், சுமூகமான தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த சத்தியாக்கிரகப் போராட்டம், இன்றைய தினத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
