மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை வாழ் இந்து மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கும் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“சிவனின் மகா இரவு” என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, இருளை வெல்லும் ஒளியினதும், அறியாமையை வெல்லும் ஞானத்தினதும் ஆழமான அடையாளமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், இது ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக ஒழுக்கம் மற்றும் உள் அமைதியைத் தேடுவதற்கான ஒரு காலம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பல்கலாச்சார மற்றும் பல்மத சமூகத்தில், மகா சிவராத்திரியானது சுயநலமின்மை, இரக்கம் மற்றும் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் மூலம் சவால்களை சமாளிக்கும் வலிமை போன்ற பகிரப்பட்ட விழுமியங்களை குடிமக்களுக்கு நினைவூட்டுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
சிவபெருமானின் ஆசீர்வாதங்கள் பக்தர்களின் இல்லங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக நிறைவைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் அமரசூரிய தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
“பக்தர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபடும் வேளையில், மிகவும் இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை நாம் அனைவரும் சிந்திப்போமாக” என்றும் பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
