தலங்கம, அகுரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு சகோதரர்கள் கொட்டாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 20 மற்றும் 24 வயதுடைய குறித்த சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையின் போது சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளனர் என்பது குறித்தும், அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னணி: கடந்த வாரம் அகுரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (16) நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த முக்கியக் கைதுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
