மருதானை புகையிரத நிலைய புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!
கொழும்பு: வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மருதானை புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) காலை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நாடு தழுவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களைப் புனரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரச-தனியார் பங்காளித்துவத்துடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, விசேட தேவையுடையோர் உட்பட அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் புகையிரத நிலையங்களை நவீனமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.
நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, “பழைய அரசியல் முறைமைகளால் புறக்கணிக்கப்பட்டிருந்த புகையிரத சேவையில், பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்,” என்றார். தொழிற்சங்கங்கள், பயணிகள் மற்றும் தனியார் துறையினரின் கூட்டு முயற்சியிலேயே இத்திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
