“திராவிட இயக்கம் போல கலையின் மூலம் மாற்றம் செய்கிறோம்”: ‘தண்டகாரண்யம்’ விழாவில் பா.ரஞ்சித்!
சென்னை: தனது நீலம் தயாரிப்பு நிறுவனம், திராவிட இயக்கம் திரைப்படங்களை மாற்றத்திற்காகப் பயன்படுத்தியது போல, கலையின் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்பட்டு வருவதாக, இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். அவர் தயாரித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
விழாவில் அவர் மேலும் பேசுகையில், “நான் பேசும் அரசியலை சினிமா உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும் என்ற சந்தேகத்தால், மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிப்பேன் என நினைத்தேன். ஆனால், மக்கள் என்னை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் ஏற்றுக்கொண்டனர்,” என்றார்.
“கலை தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். சமீபத்தில் நேபாளத்தில் நடந்த ‘ஜென் Z’ போராட்டத்திற்கு ஒரு ராப் இசைக் கலைஞரின் கலைதான் தூண்டுதலாக இருந்தது. அதுபோல ஒரு மாற்றத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
