நாட்டில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகக் கூறி, இன்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பில் அவசர சங்க மாநாடு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
இது அரசியல் நோக்கற்ற மாநாடு என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், இன்றைய தினம் நடைபெறும் இந்த நிகழ்வின் பின்னணியில் ராஜபக்ச விசுவாசிகள் அல்லது ‘ராஜபக்ச ரெஜிமென்ட்’டினரின் கைகள் இருப்பதாக பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, ராஜபக்ச அணியுடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட முக்கிய தேரர்கள் முன்னின்று நடத்தும் இன்றைய இந்த மாநாடும், அதே தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘பிரிவினைவாதத்திற்கு’ எதிரான கையெழுத்து வேட்டையும், அரசியல் ரீதியாகத் தளர்வடைந்துள்ள ஒரு தரப்பு மீண்டும் மத உணர்வைத் தூண்டிவிட்டு தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் தேவையற்ற அரசியல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது.
இல்லாத ஒரு பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை விதைக்கும் முயற்சியாகவே இன்று நடைபெறும் இந்த சங்க மாநாடு அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்படுகின்றன.
