நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வரும் மார்ச் 18 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளை அரச துறை ஊழியர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
விலக்களிக்கப்பட்ட துறைகள் இந்த விடுமுறை அறிவிப்பானது அத்தியாவசிய சேவைகளான சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர் வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கு பொருந்தாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் துறைகள் வழமை போன்று இயங்கும்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள் அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதே நடைமுறையைப் பின்பற்றுமாறு தனியார் நிறுவனங்களிடமும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்:
- எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.
- புதன்கிழமை தவிர ஏனைய 4 நாட்களில், பணியின் அவசியத்தைப் பொறுத்து ஊழியர்களை பணிக்கு அழைக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா, விவசாயம், சுகாதாரம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் எரிபொருள் தேவைகள் ஆராயப்பட்டு, அவர்களுக்கு கூடுதல் எரிபொருள் ஒதுக்கீடு (Quotas) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
