சமீபத்திய பெட்ரோல் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, முச்சக்கர வண்டிகளுக்கான முதல் கிலோமீட்டர் பயணக் கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கத்திடம் தேசிய இணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம் (NJTWDIWA) கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தங்கள் முச்சக்கர வண்டித் தொழில்துறையினர் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையானது இரட்டைச் சுமையாக மாறியுள்ளதாகவும், சாரதிகள் அதிகப்படியான எரிபொருள் விலையை மாத்திரமன்றி அதன் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். “இதன் காரணமாகவே, முதல் கிலோமீட்டருக்கான முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் 20 ரூபா அதிகரிப்பை நாங்கள் உத்தியோகபூர்வமாக முன்மொழிகிறோம்,” என ரோஹண பெரேரா வலியுறுத்தினார்.
இந்த உத்தேச கட்டணத் திருத்தமானது முதல் கிலோமீட்டருக்கு மாத்திரமே பொருந்தும் எனவும், முறைப்படுத்தப்பட்ட கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தும் சாரதிகளால் மாத்திரமே இதனை முறையாகவும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலும், நிலையானதொரு முடிவை எட்டும் நோக்கிலும் சங்கத்தின் பிரதிநிதிகள் வெகுவிரைவில் ஜனாதிபதிச் செயலக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
