[செய்திப் பிரிவு – Tamilmurasu.lk]
கடந்த மாதம் இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையாக இடம்பெற்ற கப்பல் விபத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தஞ்சம் புகுந்திருந்த ஈரானிய கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் உட்பட 240 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக ஈரான் திரும்பியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றமான சூழலுக்கு மத்தியில், சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) எனும் ஈரானியக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியது. இந்தத் துயரச் சம்பவத்தின் போது டஜன் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், 32 பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில், உயிர் பிழைத்த ஈரானிய கடற்படை வீரர்களுக்கு இலங்கை அரசு புகலிடம் அளித்துப் பாதுகாத்து வந்தது. இந்நிலையில், மூழ்கிய ‘ஐரிஸ் தேனா’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் ‘ஐரிஸ் புஷேர்’ (IRIS Bushehr) கப்பலின் பணியாளர்கள் உள்ளிட்ட 240 பேரையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதற்கமைய, இலங்கை அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விமானம் மூலம் அக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாகத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
