கட்டுரை:
சென்னை: தென்னிந்திய சினிமாவின் ‘மகுடம் சூடா மன்னன்’, இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் என அசுர வேகத்தில் வலம் வருபவர் ராக்ஸ்டார் அனிருத். மறுபுறம், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன். இந்த இரு ‘பவர்ஃபுல்’ ஆளுமைகளும் காதலித்து வருவதாக ஏற்கனவே கோலிவுட் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் தீயாய் பரவி வந்தன.
சமீபத்தில் வெளியான ‘லவ் இன்சூரன்ஸ் கொம்பனி’ படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், அனிருத்தின் இசை படத்தை வேற லெவலுக்கு எலிவேட் செய்ததாக அனைவரும் பாராட்டினர். இப்படித் தொழில் ரீதியாக உச்சத்தில் இருக்கும் அனிருத், பெரிய இடத்துப் பெண்ணுடன் காதலில் இருக்கிறார் என்ற பேச்சு சற்றே ஓய்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வெளிநாட்டில் திருமணம்?
முன்னதாக, இவர்களது கல்யாண வதந்தி குறித்து அனிருத் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “கல்யாணமா? லொள்ளு, சில்லா இருங்க மக்களே, வதந்திகளைப் பரப்பாதீங்க” என்று பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், தற்போது வரும் தகவல்கள் மிகவும் வலுவாக உள்ளன.
சமீபத்திய தகவல்களின்படி, அனிருத் மற்றும் காவ்யா மாறன் வீட்டார் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து, திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில், வரும் நவம்பர் மாதம் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் ஸ்பெயின்?
மிகவும் பிரமாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திருமணம் இந்தியாவில் நடக்காது என்றும், வெளிநாடான ஸ்பெயினில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஸ்பெயினில் திருமணம் முடிந்த கையோடு, சென்னையில் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுக்காகப் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இணையத்திலும் திரையுலகிலும் இந்தத் தகவல் காட்டுத்தீயாய் பரவி வந்தாலும், அனிருத் தரப்பிலிருந்தோ அல்லது மாறன் குடும்பத்தினரிடமிருந்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மீண்டும் ஒரு வதந்தியா அல்லது நிஜமாகவே ‘தேதி’ குறிக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
