அரஹத் மஹிந்து தேரரின் வருகை மற்றும் பௌத்த மதத்தின் வருகையானது இலங்கையை ஆன்மீகம், கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக மாற்றியமைத்த ஒரு வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது போசன் பௌர்ணமி தின செய்தியில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த தர்மமானது விகாரைகளை கற்றல் மையங்களாக மாற்றி கல்வியை ஊக்குவித்ததன் மூலமும், ஒழுக்க விழுமியங்களை வளர்த்ததன் மூலமும், கட்டிடக்கலை, கலை, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் சாதனைகளை தூண்டியதன் மூலமும் இலங்கையின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்டது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் பௌத்த விழுமியங்களையும் தார்மீகக் கொள்கைகளையும் பாதுகாத்து புத்துயிர் பெறச் செய்யும் பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றம் மற்றும் அரச துறை உட்பட பொது நிறுவனங்களில் நாகரிகத்தையும் ஒருமைப்பாட்டையும் மீட்டெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உழைத்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“நெறிமுறை அடித்தளம் இல்லாமல் எந்தவொரு நாடும் உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது. அரஹத் மஹிந்து தேரரால் போதிக்கப்பட்ட ‘சூளஹத்திபதோபம சூத்திரம்’ முறையான பயிற்சி மற்றும் ஒழுக்கமான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என ஜனாதிபதி தனது செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.
கருணை, சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களின் அடிப்படையில் நவீன, நெறிமுறை மற்றும் அறிவொளி பெற்ற தேசத்தைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
