தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், ஆளும் தவெக எம்எல்ஏ-வை விலைபேசியதாகப் பதிவான வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஐபிடிஎஸ் (IPDS) என்கிற கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், ஒரு “முக்கிய கட்சியின் மூத்த நிர்வாகி” சொல்லித்தான் பேசுவதாகக் கூறியுள்ளார்.
அந்த உரையாடலில், திருநாவுக்கரசு எம்எல்ஏ இளையராஜாவிடம் ஒரு அதிர்ச்சிகரமான பேரம் பேசியுள்ளார். அதாவது, நம்பிக்கைக் வாக்கெடுப்பின் போது, அவர்கள் சொல்வது போல நடந்து கொண்டால், அவருக்கு ரூ.35 கோடி கொடுக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
கொலை மிரட்டல்
மேலும், இந்தத் தகவலை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும், மீறினால் எம்எல்ஏ-வின் குடும்பத்தினர் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். திருநாவுக்கரசு, தான் பேசுவதற்குச் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகியான கார்த்தி, நரேன் கிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆகியோர் முழு ஆதரவு அளிப்பதாகவும், நீங்கள் சம்மதித்தால் அவர்கள் உங்களை நேரில் சந்திப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
வழக்குப்பதிவு மற்றும் கைது
எம்எல்ஏ இளையராஜாவின் புகார் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், திமுக நிர்வாகி கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகிய 5 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.
விசாரணையின் அடிப்படையில், தற்போது மேலும் 4 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் முழு விவரம்:
- செல்வன்
- சீனிவாசன் (மணப்பாக்கம்)
- ராஜு (அஸ்தினாபுரம்)
- அசோக் குமார் (நாமக்கல்)
இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்கு
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும், அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் பெற பேசுவது, முயற்சி செய்வது, குற்றத்துக்கு உடைந்தையாக இருப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஆளும் தவெக அரசுக்குத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
