2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மனுதாரரால் கோரப்பட்டுள்ள நிவாரணங்கள் அடிப்படை உரிமைகள் சார்ந்தவை என்பதால், அவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, இந்த மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளின் போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாய்மூல சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
