இலங்கை அரசாங்கத்தின் மிகச்சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் துரித பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வலுவானதொரு நிலையை எட்டியுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு நிதி ஆய்வறிக்கையின்படி, இலங்கை வரலாற்றில் முக்கியதொரு மைல்கல்லாக, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை நீக்கப்பட்டு, 9.5 பில்லியன் ரூபா உபரி (Surplus) பதிவாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா பாரிய பற்றாக்குறை நிலவிய சூழலில், தற்போதைய அரசாங்கத்தின் திறமையான வரி வசூலிப்பு மற்றும் முறையான செலவீனக் கட்டுப்பாடுகள் மூலம் இந்த பிரம்மாண்டமான திருப்புமுனை சாத்தியமாகியுள்ளது. இது அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
வருமானத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி:
அரசாங்கத்தின் தொலைநோக்குடைய பொருளாதாரக் கொள்கையினால், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து, 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, வரி வருமானம் 25.9 சதவீத வளர்ச்சியைக் காட்டி 2.71 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. அரசாங்கம் நிர்ணயித்த வருடாந்த வரி இலக்கில் 55 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை முதல் ஆறு மாதங்களிலேயே எட்டியிருப்பது அரசாங்கத்தின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும்.
திணைக்களங்களின் சிறப்பான பங்களிப்பு:
அரசாங்கத்தின் வழிகாட்டலில் இயங்கும் முக்கிய திணைக்களங்கள் வருமானத்தை ஈட்டுவதில் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டுள்ளன. இலங்கை சுங்கம் 1,290 பில்லியன் ரூபாவையும் (48%), உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,248 பில்லியன் ரூபாவையும் (46%) ஈட்டி, தேசிய பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்துள்ளன. மோட்டார் வாகன இறக்குமதி மீதான வரிகள் மூலம் கிடைத்த வருமானம் 106.5 சதவீதத்தால் அதிகரித்திருப்பது, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீட்சியைத் தெளிவாகக் காட்டுகிறது.
செலவீனக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி:
அரசாங்கம் வருமானத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், செலவீனங்களையும் மிகச் சீராக முகாமைத்துவம் செய்துள்ளது. தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டு, நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான மூலதனச் செலவீனங்கள் 23.6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, நாட்டின் கடன் சுமையைக் குறைக்கும் முகமாக, வட்டிச் செலுத்தல்கள் 2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன.
அரசாங்கத்தின் இந்த அனைத்துச் சாதகமான நடவடிக்கைகளின் அறுவடையாக, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீதத்தினால் மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமான வளர்ச்சியாகும்.
ஒட்டுமொத்தத்தில், நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மிகக்குறுகிய காலத்தில் மீட்டெடுத்து, ஸ்திரமான மற்றும் வளமான பொருளாதாரப் பாதையை நோக்கி இட்டுச் செல்வதில் தற்போதைய இலங்கை அரசாங்கம் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது என்பது இந்தத் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
