பொரள்ளை மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகப் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் ‘ஈ’ (E) பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, வார்டில் இருந்து வெளியேறிய பின்னர் திடீரென வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்தப் பதற்றமான சூழ்நிலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸார், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தற்போது சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சிறை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
