Headlines

டிசி’ விமர்சனம்: இயக்குநராக மட்டுமல்ல, நடிகராகவும் ‘சம்பவம்’ செய்த லோகேஷ் கனகராஜ்; அருண் மாதேஸ்வரனின் வெறித்தனமான ஆக்ஷன் வேட்டை!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், முதன்முறையாகக் கதாநாயகனாக அவதாரமெடுத்துள்ள திரைப்படம் ‘டிசி’ (DC). ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ என ராவான ஆக்ஷன் படங்களுக்குப் பெயர் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இப்படம், வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கதைக்களம்:

படத்தின் தலைப்பிலேயே கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ‘டிசி’ என்றால் தேவதாஸ் (D) மற்றும் சந்திரா (C). தன் தாயைத் தாய்மாமன்களே படுகொலை செய்ய, தந்தையின் பேச்சை மீறிப் படிப்பைக் கைவிட்டு, தன் மாமன்களைப் பழிவாங்கி வேலூரில் லோக்கல் டானாக மாறுகிறார் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்).

தன் மகனை ஆங்கில வழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன், சொத்துக்களை விற்றுப் பணத்துடன் செல்லும் ஒருவரை, பணத்திற்கு ஆசைப்பட்டு காவலர்கள் படுகொலை செய்கின்றனர். அந்த அநீதியைக் கண்டு பொங்கிழும் தேவதாஸ், தன் சகாக்களுடன் இணைந்து அந்தக் காவலர்களைப் போட்டுத் தள்ளுகிறார். இதனால், போஜராஜன் தலைமையிலான ஒரு போலீஸ் படை தேவதாஸை வேட்டையாடத் துடிக்கிறது. இதிலிருந்து தேவதாஸ் தப்பித்தாரா? தேவதாஸின் வாழ்க்கையில் குறுக்கிடும் பார்வதி (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) மற்றும் விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்படும் சந்திரா (வாமிகா கபி) ஆகியோர் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதே ‘டிசி’ படத்தின் மீதிக்கதை.

படம் எப்படி இருக்கு? – அலசல்:

படம் ஆரம்பமான முதல் காட்சியிலிருந்தே இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் முத்திரை ஆழமாகப் பதிந்துள்ளது. போலீஸ் வாகனத்தை மறித்துத் துப்பாக்கிகளைத் திருடுவது, வேலூரில் டானாக வலம் வருவது எனப் படம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. பின்னர் சென்னைக்குத் தப்பிச் சென்று மேன்ஷனில் தங்கும் இடங்களில் திரைக்கதை சற்று நிதானித்தாலும், எமோஷனல் காட்சிகளால் நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கிறார் இயக்குநர்.

கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார். படம் முழுவதும் சிரிப்பே இல்லாத இறுக்கமான முகம், பெண்களை மதிக்கும் குணம், சண்டைக் காட்சிகளில் வெறித்தனம் என மிரட்டியுள்ளார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் சந்திராவை மீட்கும் காட்சியில் லோகேஷின் நடிப்பு அபாரம்.

பார்வதியாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இடைவேளை வரை மட்டுமே வந்தாலும், பார் பாடகியாகத் தன் நடிப்பாலும், ஸ்க்ரீன் பிரசன்ஸாலும் கவர்கிறார். சந்திராவாக வரும் வாமிகா கபி, நடிப்பில் தான் ஒரு ராட்சசி என்பதை நிரூபித்துள்ளார். விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்படும் இடங்கள், பின்னர் தேவதாஸை அவர் காப்பாற்றும் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கின்றன. வில்லனாக வரும் போஜராஜன் கதாபாத்திரமும் ராவாகவும், எதார்த்தமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் பாயிண்ட்கள்:

  • அனிருத்தின் இசை: இந்த படத்தின் உண்மையான ஹீரோ அனிருத் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஹாலிவுட் தரத்திலான டைட்டில் கார்டு முதல், படம் முழுவதும் வரும் பின்னணி இசை மற்றும் பாடல்களால் படத்தை அடுத்த கட்டத்திற்கு எலிவேட் செய்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளுக்கும், காதலுக்கும் இடையே அவர் இசை மூலம் கடத்திய விதம் பிரம்மிப்பு.
  • ஆழமான எமோஷன்: அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களைப் போலவே இதுவும் ராவான ஆக்ஷன் படமாக இருந்தாலும், இதில் உள்ள அழுத்தமான எமோஷனல் கனெக்ட் தான் படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளது.
  • ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: முகேஷ். ஜியின் ஒளிப்பதிவு, குறிப்பாகக் கண்ணாடி உரையாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. பிரசன்னா ஜி.கே.வின் படத்தொகுப்பு எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

மைனஸ் பாயிண்ட்கள்:

  • வழக்கமான கதை: கேங்ஸ்டர் ஹீரோ, போலீஸ் வில்லன், பழிவாங்கல் என்ற வழக்கமான டெம்ப்ளேட் கதை தான் என்பது சற்று ஏமாற்றத்தைத் தருகிறது.
  • ஆக்ஷனில் மட்டுமே கவனம்: கதை மற்றும் திரைக்கதையில் பெரிய புதுமைகள் இல்லாமல், ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தியிருப்பது மைனஸ் ஆக உள்ளது.
  • ஏ சான்றிதழ் & வன்முறை: படத்தில் ஆபாச வசனங்கள், அதீத ரத்தம், மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. சென்சாரில் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் எப்படித் தப்பித்தன என்பது ஆச்சரியம் தான்.

முடிவு:

வழக்கமான கேங்ஸ்டர் கதை தான் என்றாலும், அருண் மாதேஸ்வரனின் தனித்துவமான இயக்கம், லோகேஷ் கனகராஜ் – வாமிகா கபியின் மிரட்டலான நடிப்பு, அனிருத்தின் மாஸ் இசை ஆகியவை ‘டிசி’ படத்தை ஒரு வொர்த்தான ஆக்ஷன் சம்பவமாக மாற்றியுள்ளது. அதீத வன்முறையை விரும்பாதவர்கள் தவிர, மற்றவர்கள் தாராளமாகத் தியேட்டரில் போய்ப் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3.75/5

இது தமிழ் முரசு விமர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *