ஆசியக் கிண்ணம் 9ஆவது முறையாக இந்தியா வசம்: த்ரில்லர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன்!
துபாய்: துபாயில் நேற்று (28) நடைபெற்ற பரபரப்பான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, 9ஆவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
147 என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி, 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும், திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் இணைந்து அணியை மீட்டனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ஓட்டங்களைக் குவித்த திலக் வர்மா, கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும், குல்தீப் யாதவின் (4 விக்கெட்டுகள்) சுழற்பந்து வீச்சில் சரிந்து, 19.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது.
