துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘டிங்கர்’: 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
கொழும்பு: துபாயில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கரை’, 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு (CCD) ஹல்ப்ஸ்டோர்ப் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் துபாய் பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இவர், நேற்று (01) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், ஹல்ப்ஸ்டோர்ப் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, நாளை (03) வரை அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர், ‘கொச்சிக்கடை ஷிரான்’ என்பவரின் நெருங்கிய சகாவாகச் செயற்பட்டு வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பேலியகொடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு ஆயுதங்களைக் கொண்டு சென்றமை மற்றும் கடந்த ஆண்டு கிராண்ட்பாஸில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒன்றில் சாரதியாகச் செயற்பட்டமை உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
