மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் “சிவப்பு” (Red) மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய, மறு அறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பரப்புகளுக்கு மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகள் பொருட்டுச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (09) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (10) காலை 7.00 மணி வரை அமலில் இருக்கும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, சிலாபத்திலிருந்து திருகோணமலை, கங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாகவும், காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், அங்கு மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
